வெளிச்சம் கூட
அன்னியமாகட்டும்
இக்கணம்...
அருகில் நீ
அணைப்பில் நான்.
அழுகை மறந்து
ஆனந்தம் தேடும்
தருணம்
இரவின் நிலவு
அமைதியை நிலவ
வெளிச்சமில்லா இரவாய்
நிலவது தேய்ந்து மறையாதோ
ஆனந்த தருணம் அது நீளதோ
நாணம் அது குறையாதோ
காதல் கவிதை தொடராதோ
பிரிவின் நினைவுகள்
அலைமோத
அணைப்பின் கதகதப்பில்
முகம் பார்த்து
தேக்கி வைத்த ஏக்கங்களையும்
சொல்லாத வருத்தங்களையும்
விழிகளில் நான் வரைய
விழியின் மொழி அறிந்து
மௌனமாகி
என்னை புரிந்தும்
புரியாதவனாய்
கண்ணோடு கண்ணோக்கி
மறுமொழி நீ கூற
வெட்கத்தால் நான் துடிக்க
என்னோடு சேர்ந்து
நாணம் தாளாமல்
நிலவும் மறைய
காரிருள் நம்மை சூழும் நேரம்
இதமான அணைப்பு
இறுக்கமாய் மாறி
காற்றின் குளுமை கூட
என்னை அனலாய் சுட்டெரிக்க
உன் அணைப்பில் இருந்து
விடுபட முடியாமல் நான்....
விடியாத இரவாய்
முடியாத உறவை
நீங்காத நினைவாய்
என் வாழ்வது நீளாதோ
உன்னோடு வாழும் வரம்
கிடைக்காதோ....
என்னவனே
சோகம் மறந்து
சுகம் காணும் நாள் வேண்டும்
பார்வை முழுதும்
உன்னில் நிலை கொண்டு
என்னிலை
மறக்கும் நாள் வேண்டும்
உன் மார்போடு முகம் புதைத்து
துக்கம் மறந்து
முடியாத துயிலை தொடர
கையோடு கைசேர்த்து
காலம் முழுதும் உன்னை தொடர
உனக்கு பின்னால் நானும்
என் பெயருக்கு பின்னால் நீயும் வருவாயா
No comments:
Post a Comment